சுகாதார பாதுகாப்பு முறைமைகளுடன் இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பொறுப்புடன் பாடசாலைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் 2-13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கையானது முன்னெடுக்கப்படவுள்ளது.

மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் உள்ள பாடசாலைகளில் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னதாக கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலைகளில் இருக்கும் போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்தும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்குமானால் இடைவெளியை பேணும் சந்தர்ப்பங்களில் அதனை அகற்ற முடியும். பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போதும் அனைத்து மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதாக வகுப்பு மட்டத்தில் ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தமது வீடுகளிலிருந்து எடுத்து வரும் உணவு, குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிமாற்றிக் கொள்ளக் கூடாது.

தூர இடைவெளியை பேணி, உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பிள்ளைகளின் மனநல சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அவசியம் குறித்தும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் உள்ள பிள்ளைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் ஆகியோர் சுகாதார ஆலோசனைகள் கிடைக்கும் வரை பாடசாலைகளுக்கு வருவதை தவிர்குமாறும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பத்தை முன்னிட்டு நேற்று முதல் பாடசாலை வளாகத்தில் நுளப்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு விரிவு தெரிவித்துள்ளது.

இதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கருத்து தெரிவிக்கையில் இந்த வருட கடந்த காலங்களில் 247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறினார்.

ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படுள்ளர். இவர்களின் எண்ணிக்கை 146 ஆகும்.