‘சமூக ஊடங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் திறனைக் கொண்டது’: ரணில்!

ranil 696x392
ranil 696x392

“சமூக ஊடகங்கள் பண்டைய காலத்தின் கடவுளைப் போன்றது: உருவாக்கவும், அழிக்கவும், சுதந்திரத்தின் செய்தியைப் பரப்பவும் வல்லது. அழிவுக்கு வழிவகுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் திறனையும் கொண்டது” என்று மாலைதீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க, நேற்று மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீரின் அழைப்பையேற்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அங்கு அவர் உரையாற்றியபோது,

செய்திகளின் ஜனநாயகமயமாக்கும் பயனரின் சட்டபூர்வமான கடமைகளுக்கும் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிவது என்பது பல நாடுகளுக்குமுள்ள சிக்கலான கேள்வி.

வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் போலி செய்திகளை பரப்புவதன் மூலம் ஜனநாயகத்திற்கான இடைவெளியை துஷ்பிரயோகம் செய்வது உண்மையான ஆபத்து. சமூக ஊடகங்கள் பண்டைய காலத்தின் கடவுளைப் போன்றது: உருவாக்கவும், அழிக்கவும் வல்லது. சுதந்திரத்தின் செய்தியைப் பரப்பவும் வல்லது. அழிவுக்கு வழிவகுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் திறனையும் கொண்டது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தையும் வலுப்படுத்த முடிந்ததாக குறிப்பிட்ட பிரதமர்,
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் இலங்கை ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தை பெற்றுள்ளன என்றார்.

“சட்டங்கள் ஜனநாயகத்தை பலப்படுத்தாது. முக்கிய ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவது, மற்றும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறை அவசியம். அரசியலமைப்பு சபைக்கு நியமனம் செய்பவர்கள் இனி 19 ஆவது திருத்தத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரியின் விருப்பங்களை சார்ந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட இடம் உண்டு. முந்தைய ஆட்சியின் கீழ் அரசியலமைப்பின் அப்பட்டமான மீறல்கள் காரணமாக 19 வது திருத்தம் அவசியம் என்று கருதப்பட்டது“ என்றார்.

“ஜனநாயகத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று, மக்கள் தகவல் அறியும் உரிமை. இது 19 வது திருத்தத்தில் அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது. எங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டம், உலகின் வலிமையான சட்டங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது ”என்று பிரதமர் கூறினார்.

19 வது திருத்தம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தியது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் கலைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றம் கோராவிட்டால் ஜனாதிபதி நான்கரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது” என்றார்.

இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தையும் பிரதமர் சிலாகித்து குறிப்பிட்டார். சார்க் நாடுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடம் மாலைதீவு.

2017 ஆம் ஆண்டில் 271.1 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 2018 இல் 304.3 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.