பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்தவியாபார சந்தை செயற்படும்-கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்

unnamed 9
unnamed 9

வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையில் நாளையில் இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கண்டிவீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக வவுனியா நகரப்பகுதி சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த விற்பனை சந்தையும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வவுனியா காமினி வித்தியாலய மைதானத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. 

எனினும் வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக காமினி மகாவித்தியாலய மைதானத்தில் நீர் தேங்கிநிற்பதுடன், மன்னார் பிரதான வீதியும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
இந்நிலையில் மாற்று ஏற்பாடாக நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மதவு வைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


எனவே நாளை காலை5 மணியிலிருந்து மரக்கறிகளை  குறித்த பகுதிக்கு எடுத்துவருமாறு விவசாயிகளிடம் கோரப்பட்டுள்ளது.