மன்னாரில் கொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பம்

DSC 0080
DSC 0080

மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை(11) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் புதிய பேருந்து தரிப்பிட பகுதியில் கடந்த 6 ஆம் திகதி 200 நபர்களுக்கு எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 2 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய 198 நபர்களுக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் இலங்கை அரச போக்குவரத்து சேவையின் புத்தளம் சாலைக்கான நிக்கராவெட்டிய பகுதியைச் சேர்ந்த நடத்துனர்.

மன்னார்-புத்தளம் அரச போக்குவரத்து சேவையின்  நடத்துனரான குறித்த நபருக்கு தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது. மற்றைய நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உப்புக்குளம் கிராமத்தை அண்மித்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூடப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் வழமை போல் இயங்கும்.

ஏற்கனவே மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் 5 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 113 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அடுத்த வாரம் அளவில் விடுவிக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்களில் 70 மாணவர்களும் உள்ளனர்.அவர்களும் அடுத்த வாரம் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடை விற்பனை நிலையத்திற்கு சென்ற, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.