நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லையென நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 05-01-2021ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அவருடன் நெருக்கமான தொடர்பினை பேணியவராக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தானாக முன்வந்து அவர் தனது குடும்பத்தினருடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். இந்தப் பரிசோதனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எவருக்குமோ கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.