வீடுகளுக்குள் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து வீட்டின் உள்ளே சென்று, வீட்டின் உள்ளிருந்த பெண்ணொருவரின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் தப்பித்துள்ளார்.
இச் சம்பவம் வடமராட்சி, தொண்டைமானாறு, அரசடியில் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் தன்னை சுகாதாரத் துறை உத்தியோகத்தராக கூறிக் கொண்டு இப் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று பதிவுகளையும் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது தனித்திருந்த பெண்ணொருவரின் வீட்டிற்குள் சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளார்.
வீட்டில் இருந்த பெண் கூக்குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை துரத்திச் சென்றவர்கள் பலாலி, அன்ரனிபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்து, பலாலி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த கொள்ளைச் சம்பவம் வல்வெட்டித்துறை காவல்துறை பகுதி தொண்டைமனாற்றில் இடம்பெற்றுள்ளமையினால், வல்வெட்டித்துறை பலாலி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.