பலவித குற்றச்செயல்கள் குறித்து காவற்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தலையிடுவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் சில இனந்தெரியாத சக்திகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என காவற்துறை மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து காவல் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளிற்கு அனுப்பிவைத்துள்ள சுற்றுநிரூபத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பலர்காவற்துறை உத்தியோகத்தர்களை தொலைபேசிகளில் தொடர்புகொண்டு தாங்கள் காவற்துறை மா அதிபரின் உறவினர்கள் என தெரிவிக்கின்றனர் என காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களின் சார்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் காவற்துறை மா அதிபர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.