19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில்!

616aab03886cdfee622e03434c4071ee XL
616aab03886cdfee622e03434c4071ee XL

பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே அந்தப் பெண் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் காணாமற்போயிருந்தன. அது தொடர்பில் பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 19 பவுண் தங்க நகைளைக் காணவில்லை என்றும் தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் ஒருவரில் சந்தேகம் உள்ளது என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை குற்றத் தடுப்பு காவல்துறையினர், முறைப்பாட்டில் சந்தேக நபராகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெண்ணை நேற்றுக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 10 தங்கப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இந்த திருட்டுடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடிவரும் காவல்துறையினர், சந்தேக நபர்களுக்கு வேறு கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.