போலித் தகவலால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்ப நிலை; சம்மாந்துறையில் பதற்றம்

School 15
School 15

மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது.

அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (19) காலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள் வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பாடசாலைக்கு படையெடுத்த பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விடுமாறும் பி.சி.ஆர் எடுக்கவேண்டிய தேவையில்லை எனவும் அதிபர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவித்த அதிபர்கள்,  இது ஒரு வதந்தி என தெரிவித்தனர்.

இருந்தபோதும் பெற்றோர் அதிபர்களின் பேச்சை பொருட்படுத்தாது தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் செற்றுள்ளனர்.