சிறுவர்களை மையப்படுத்தி அனர்த்த அபாய குறைப்பு தொடர்பான இரு நாள் செயலமர்வு மாவட்ட செயலகத்தின் புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(19) காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது. யுனிற்றி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் குறித்த செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவினை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்படும் இச் செயலமர்வில் சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாய குறைப்பு திட்டமூடாக அவர்களை அவசர நிலைகளில் இருந்து பாதுகாப்பாக கையாழல் மற்றும் சுற்றுச் சூழல் நலன் சார்ந்து இளைஞர் யுவதிகள் தலைமையில் அனர்த்த அபாய குறைப்புத் திட்டங்களை மேற்கொள்ளல் அதனூடாக கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பான விடயங்கள் பயிற்சியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இச் செயலமர்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், யுனிற்றி லங்கா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் கள உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளாக அதிகளவில் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.