இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனை! அதன்பின்பே நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியும்

1584351976 Hettiarachchi L 800x425 1
1584351976 Hettiarachchi L 800x425 1

விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில்,இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.என்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

14 நாட்கள் முடிந்த பிறகு, மூன்றாவது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனை முடிவில் எதிர்மறை முடிவு வரும் பட்சத்தில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுலாப்பயணிகளால் உள்ளூர் மக்களுக்குக் கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு பத்து விமானங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளது. நாட்டுக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு ஒரு விமானத்தில் 75 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு 750 இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் – என்றார்.