ஜே.ஆரின் சாயலில் பழிவாங்கும் ஜனாதிபதி கோத்தா- கடுமையாக சாடும் மக்கள் விடுதலை முன்னணி

images 1
images 1

இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன செய்தவற்றையே தற்போதுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் செய்கின்றார்.

1978 இல் நீதிமன்ற அதிகாரங்களையுடைய ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உள்ளிட்டோரது குடியுரிமையை நீக்கி தனக்கு எதிரானவர்களை ஜே.ஆர்.ஜயவர்தன பழிவாங்கியதைப் போலவே தற்போது கோத்தாபய ராஜபக்ஷவும் அவருக்கெதிரானவர்களை பழிவாங்கலுக்குட்படுத்துகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் முதலாம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ராஜபக்சாக்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் 79 வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறும் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

இது வழமையான விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் அப்பால் தண்டனை வழங்கும் ஆணைக்குழுவாக செயற்பட்டுள்ளது. இது அபாயமுடையதாகும். விசாரணை ஆணைக்குழுவொன்றுக்கு தண்டனை வழங்க முடியாது.

1972 ஆம் ஆண்டு தண்டனை வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அதற்கு சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

அதனை தொடர்ந்து 1978 இல் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அவருக்குரிய நிறைவேற்றதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரி என்பவற்றை பயன்படுத்தி நீதிமன்ற அதிகாரத்தையுடைய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் மூலமாகவே ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்து செய்யப்பட்டது.

1978 இன் பின்னர் இவ்வாறு நீதிமன்ற அதிகாரமுடைய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தன செய்ததை தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். 

தற்போது இது போன்று ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான தேவை என்ன? ராஜபக்சாக்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரானவர்களை வழக்குகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கமாகும். தற்போது 79 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையில் தவறு செய்யவில்லை என்றால் தைரியமாக நீதிமன்றத்தினூடாக தீர்வை பெற்றுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நீதிமன்றத்தில் இவர்களுக்கெதிரான வழக்குகள் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும். ஜனாதிபதி கோத்தாபய ஆட்சிக்கு வர முன்னர் அவருக்கு எதிரான எந்தவொரு வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கு வந்தததில்லை. தன்மீதான குற்றம் நிரூபிக்கப்படும் என்ற அச்சமே அவரும் அவரது சகாக்களும் நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கான காரணமாகும். 

எனவே ஆணைக்குழுவினூடாக வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் நீதிமன்றத்தில் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுகின்றோம்.

வழக்குகளிலிருந்து விடுவிப்பது மாத்திரமின்றி வழக்கு தொடர்ந்தவர்களை பழிவாங்குவதும் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் இலக்காகும். எனவே ஜனாதிபதி கோத்தாபய நியமித்த ஆணைக்குழுவை ‘அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு’ என்று கூறுவதைவிட ‘அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு’ என்று கூறுவதே பொருத்தமானதாகும். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காக சிலருக்கு இலஞ்சம் வழங்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டமை மற்றும் தனது குடும்பத்தாரை வழக்குகளிலிருந்து விடுவித்ததை தவிர மக்களுக்காக எதனையுமே செய்யவில்லை என்றார்.