வவுனியாவில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக உடன் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகவியலாளர்கள் வவுனியாவின் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக தெரிவிக்கையில்;
வெங்கல, செட்டிகுளம், ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர் பிரிவில் உடையார்கட்டு குளம் உடைப்பெடுத்தமையால் 60 ஏக்கர் நெற்பயிரில் 15 ஏக்கர் காணி முற்றாக பாதிப்படைந்திருக்கின்றது.
உடைப்பெடுத்த குளத்தினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒதுக்கீட்டின் மூலம் கமக்கார அமைப்பினூடாக திருத்தப்பட்டு இப்பகுதிக்குரிய நீர்ப்பாசனத்தை மீண்டும் மேற்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.
இந்த அடிப்படையில், தொடர்ந்தும் மழை பெய்து வவுனியா மாவட்டத்தில் ஏதாவதொரு பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாக இருந்தால் அந்த பகுதிக்குரிய பிரதேச செயலாளர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவியுடன் உடனடி வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்