வடகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

defence
defence

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் வடகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் க.விந்தன், மக்கள் மீண்டும் போராடும் நிலை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது மேலும் அவர் கூறுகையில்,

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியாகவும், முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன் விளைவு இராணுவத்திற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இப்போது போர்க் காலத்தைப் போன்று இராணுவம் வீதிகளில் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. மறுபக்கம், புங்குடுதீவில் 14 ஏக்கர், கொழும்புத்துறையில் 300 ஏக்கர் என காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

வலிகாமம் வடக்கில் 2 ஏக்கர் காணியில் இராணுவம் விகாரை கட்டுகிறது, நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் 3 அடி புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. இவ்வாறு மீண் டும் வடகிழக்கு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடங்கியிருக்கின்றது.

ஆனால் தெற்கிலோ இலங்கையின் பிற பாகங்களிலோ இராணுவத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை காண முடியவில்லை. ஒரு நாட்டின் இராணுவம் என்பது அந்த நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும், சகல மதங்களுக்கும் பொதுவானது.

அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமே தவிர ஒரு இனத்தை அடக்க நினைப்பதும், ஒரு மதத்தை மட்டும் தூக்கி கொண்டு திரிவதும் இராணுவ அடக்குமுறை அல்லாமல் வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதை போல் மீண்டும் மக்கள் தங்கள் வாழும் உரிமைக்காகவும், நிலங்களுக்காகவும் வீதியில் இறங்கி போராடும் நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றது இந்த ஆட்சி.

அதேபோல் போர்க் காலத்தை நினைவுபடுத்துவதாக வீதிகளில் இப்போது இராணுவ சோதனைகளையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். இல்லையேல் கடந்த காலத்தைப் போல் சாத்வீக போராட்டங்களுக்கு எமது மக்கள் தயாராகவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.