சிறீலங்கா பொதுஜன முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் நேரடிச் செயற்பாட்டாளான புலம்பெயர்ந்த பிரித்தானியத் தமிழரான தீபன் என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் பயணித்த தீபன் என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.