காத்தான்குடியில் கழிவுத்தேயிலை தூள் பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை முற்றுகை!

WhatsApp Image 2021 02 17 at 19.18.49 3
WhatsApp Image 2021 02 17 at 19.18.49 3

மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவுத்தேயிலை தூள் பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை (17) மாலை முற்றுகையிட்டு இலட்சக் கணக்கான பெறுமதியான களிவுத்தேயிலையை மீட்டுள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தேயிலைதூள் விற்பனை செய்யும் கடையை சம்பவதினமான இன்று மாலை கல்முனை விசேட அதிரப்படை முகாம் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ரத்நாயக்கா தலைமையில் காவல்துறை பரிசோதகர் பிரேமரத்தின, மற்றும் பண்டார உட்பட விசேட அதிரடிப்படையினர் கொண்ட குழுவினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது குறித்த கடையின் பின்பகுதியிலுள்ள தேயிலை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் பொதிசெய்யப்பட்ட தேயிலை தூள்களை சோதனையிட்டபோது அதில் பெருமளவிலான கழிவு தேயிலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

நல்ல தேயிலைத் தூள்களுடன் கழிவு தேயிலைத்தூள்களை கலந்து பல கம்பனிகளின் நாமம் சூட்டப்பட்டு பொதிசெய்து விற்பனையில் ஈடுபட்டுவருவதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தய அதிகாரி அழைக்கப்பட்டு அவர்கள் அதனை சோதனையிட்டனர்.

இதன் பின்னர் களுஞ்சியசாலையில் சுமார் 60 கிலோ கிராம் கொண்ட 100 க்கு மேற்பட்ட பொதி செய்யப்பட்ட மூடைகளை மீட்டுள்ளதுடன் இந்த களஞ்சியசாலையை பொது சுகாதார அதிகாரிகள் பூட்டி முற்றுகையிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையின் மேற்கொண்டு வருகின்றனர்.