பொதுச்சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிர்வாகத்தால் முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான 150மணித்தியாலயங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு இன்று(19) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பி.ப 1.30மணிக்கு இடம்பெற்றுள்ளது.
பயிற்சி நெறியின் கற்கை வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாக பங்குபற்றிய உத்தியோகத்தர்களின் ஆளுமையை வெளிப்படுத்துகின்ற வகையில் பல்துறைப்பட்ட கலைநிகழ்வுகள் மற்றும் அனுபவப்பகிர்வுகள் இடம்பெற்றன.
மேலும் பயிற்சி நெறியின் வளவாளர்களாக பங்குபற்றிய சுமித் பிரசன்னா, ஆர்.சபிதா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் ஊடாக ஐம்பது உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளனர்.
இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சிரேஸ்ட நிலஅளவை அத்தியட்சகர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக தேசிய மொழிகள் பிரிவின் இணைப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.