கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைப் போன்று மேற்கு முனையம் தொடர்பாகவும் போராட்டங்களை நடத்துவதற்குத் துறைமுக தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.
போராட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் ஹொரகானகே தெரிவித்தார்.
இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்குத் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தத் தீர்மானத்தை அரசு கைவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் மேற்கு முனையத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு இடமளிக்க முடியாது என்று துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு முனையத்தைப் போன்று மேற்கு முனையமும் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழே இருக்க வேண்டும் எனவும், இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதனைக் கையளிக்க முடியாது எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு மேற்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா இருந்தால் அதற்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தற்போது தொழிற்சங்கள் கூடி கலந்துரையாடி வருகின்றன என்று அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் ஹொரகானகே மேலும் கூறினார்.