ஜெனிவாவை மையப்படுத்தி தமிழ்பெண் லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ளார்

625.500.560.350.160.300.053.800.900.160.90 16
625.500.560.350.160.300.053.800.900.160.90 16

இலங்கை தொடர்பாக பிரிட்டன் அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் ‘அம்பிகை செல்வகுமார்’ என்ற பெண்ணே இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

இதன்படி ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில், பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்தே சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக அம்பிகை பணியாற்றுகின்றார்.

அத்துடன், தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளில் ஒன்றையாவது நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதற்கான சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கையுடனேயே இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.