கட்டுநாயக்கவில் இருந்து புத்தளம் வரையான ரயில்சேவைகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம் ரயில் மார்க்கத்தின் குரன மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் காரணமாக ரயில்சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முற்பகல் 8.30 தொடக்கம் 28 ஆம் திகதி முற்பகல் 8.30 வரையான காலப்பகுதியில் குறித்த மார்க்கங்களில் ரயில்சேவை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை முதல் கட்டுநாயக்க வரை மாத்திரமே ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தூரபிரதேச ரயில் சேவை மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவை ஆகியவற்றில் உறங்கல் இருக்கை ஆசனப்பதிவுகளை ஒதுக்கீடு செய்வதற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.