ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இலங்கை அரசு ஆட்சேபனை தெரிவித்தாலும், அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பிரதி ஆணையாளர் நதா அல் நாஷிப் தெரிவித்தார்.
இலங்கையுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முன்வைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக இலங்கை சில கவலைகளையும் மாற்றங்களையும் முன்மொழிந்ததால், இறுதி அறிக்கை மூன்று வாரங்கள் அளவில் தாமதமானது.
இலங்கை தொடர்பான பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான மாதிரிகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஆராய்ந்து வருகின்றது.
இவ்விடயத்தில் ஏற்கனவே சிரியா, மியன்மார் அல்லது வட கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறையா அல்லது புதிய ஒன்றா என்பதைப் பரிசீலிக்கவுள்ளது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் பொருத்தமான பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கான உரிமை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என இலங்கை அரசு மறுத்தாலும் கடந்த பல வருடங்களாக எமது அலுவலகம் பெரியளவான ஆதாரங்களைத் திரட்டியுள்ளது” – என்றார்.