மகளின் பரீட்சைக்கான அனுமதி அட்டையை தீ வைத்து எரித்த தந்தை விளக்கமறியலில்

Pinai
Pinai

நேற்று ஆரம்பமான கல்வி பொது தாராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த தனது மகளின் அடையாள அட்டை, பரீட்சை அனுமதி பத்திரம் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொழுத்திய தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், காலி நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 36 வயதுடைய குறித்த தந்தை கடந்த 27 ஆம் திகதி மதுபோதையில் தனது வீட்டிற்கு சென்ற நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் வீட்டில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அடையாள அட்டை மற்றும் பரீட்சை அனுமதி பத்திரம் என்பன தீயில் சேதமடைந்ததாக காவல்துறையினால் உறுதிப்படுத்தப்பட்டதால், குறித்த மாணவி நேற்றைய தினம் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.