வீடு ஒன்றின் உரிமையாளரின் சாரத்தை எடுத்து உடுத்துக் கொண்டு அவரைப்போல பாசாங்கு காட்டிக்கொண்டு வீட்டில் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்தில் திங்கட்கிழமை (01) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளலில் வீட்டின் அறையில் இரு பிள்ளைகளும் மண்டபத்தில் தாயும் பிள்ளை ஒன்றும் வீட்டின் வெளிப்பகுதியில் வீட்டின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் மலசல கூடத்தில் சிறிய ஜன்னல் அமைக்க விடப்பட்டிருந்த பகுதிவழியாக திருடன் வீட்டின் உட்பகுதிக்குள் உள்நுழைந்து அங்கிருந்த உரிமையாளரின் ஒரு சாரத்தை எடுத்து கட்டிக் கொண்டு அறையினுள் புகுந்துள்ளான்.
அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த குறித்த வீட்டின் உரிமையாளரின் மனைவி, கணவர் பிள்ளைகள் தூங்கும் அறைக்கு சென்றுள்ளர் என அவதானித்த அவர் கணவர் என நினைத்து என்ன அறையில் செய்கின்றீர்கள் என கேட்டபோது அறையில் இருந்து சில நிமிடங்களின் பின்னர் வெளியே சத்தம் எதுவும் போடாதவாறு வெளியேறி சமையலறைப்பகுதிக்கு சென்றுள்ளான்.
இதனையடுத்து படுக்கையில் இருந்து எழும்பிய அவர் மின் விளக்கை பேட்டபோது சமையலறை பகுதி கதவினை திறந்து கொண்டு திருடன் போவதை கண்டுள்ளார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து வெளிப்பகுதி முகப்பை பார்த்தபோது கணவர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு அறையின் அலுமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 7 ½ அரைப்பவுண் தங்க நகைகளை திருடன் திருடிஉள்ளதை கண்டுகொண்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்