ஓட்டமாவடியில் டெங்கால் 149 நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு

01 7
01 7

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சுத்தம் செய்யும் நடவடிக்கை வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த 626 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் 149 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்தோடு கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2021ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி வரை 258 நபர்களுக்கு எதிராக பொலிஸ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.