13ஆவது திருத்தத்துக்கு கட்டுப்பட்டுள்ளது அரசு! அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

kekaliya
kekaliya

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டின் அரசமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அதன்படி நடந்துகொள்வதற்கு அரசு கட்டுபட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசு  நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்றும், இந்த நடவடிக்கைகளின் பின்னால் இந்தியாவின் அழுத்தங்கள் உள்ளனவா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, இந்த விடயத்தில் யாருடைய தலையீடும் கிடையாது என்று குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் நாட்டின் அரசமைப்பில் ஓர் அங்கம் என்பதால் அதுவொரு அடிப்படைச் சட்டமாகவே இருக்கின்றது. இதற்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். அதன்படியே மாகாண சபைகளுக்கானத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.