கொள்கையற்ற அரசே ஆட்சியில்! – சாடுகின்றார் கிரியெல்ல

kiriella
kiriella

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனக் கூறுபவர்களே தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆயத்தமாகின்றனர். தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது வேலைத்திட்டமோ கிடையாது.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் குறித்தவொரு குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இவ்வாறு அரசின் தேவைக்கேற்ப சட்ட மூலத்தை உருவாக்குவது தவறாகும்.

புதிய சட்ட மூலத்தை உருவாக்க சகல கட்சிகளினதும் ஆலோசனைகள், கருத்துக்கள் கோரப்பட வேண்டும்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசில் நாம் அவ்வாறுதான் உருவாக்கினோம்.

எனவே, மாகாண சபை தொடர்பான புதிய சட்ட மூலமொன்றை உருவாக்குவதாயின் நாடாளுமன்றத்தில் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோருகின்றோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கோரப்பட்டது. எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் அறிவித்திருந்தோம். ஆனால், அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனக் கூறுபவர்களே தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆயத்தமாகின்றனர். தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது வேலைத்திட்டமோ கிடையாது.

இதேவேளை, சீனி இறக்குமதி வரி குறைப்பு மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே, இனியும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது. நேரடியாக வழக்குத் தொடர முடியும். காரணம் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் போது எமது அரசிலேயே வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகவுள்ளது. அதில் எவ்வித சாட்சிகளும் உள்ளடக்கப்படவில்லை.

ஆணைக்குழுவொன்றுக்கு விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்பும் வழங்க முடியாது.

ஆனால், இந்த ஆணைக்குழு அவை இரண்டையும் செய்துள்ளது. முக்கிய சாட்சிகளை முன்னிலைப்படுத்தியிருந்தால் தற்போதைய அரசின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்- என்றார்.