வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட  பிசீஆர் பரிசோதனையில் நோயாளர் விடுதியில் கடமையாற்றும் இரு தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (27.03) மதியம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனை என்பவற்றில் மேலும் இரு வவுனியா வைத்தியசாலை தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் பிசீஆர் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியாவில் இன்று நான்கு தாதியர்கள் உட்பட 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.