முல்லைத்தீவில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதீயில் பாதிப்பு

vavu2
vavu2

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்தமைத்துவத்தினை கொண்ட சிறுகைத்தொழில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளான நிலையில், அவர்கள் ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றினை கடந்த 27.03.21ஆம் திகதியன்று மாங்குளத்தில் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுயதொழிலை முன்னெடுத்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதீயில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இது குறித்து 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கையொன்றையும் ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தின் காரணமாக சுமார் 5000 ற்கும் அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது.

பெரும்பாலும் சிறு கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் பல உள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் இவர்கள் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டியது பெண் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது.

கோரிக்கைகளாக நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, இவர்களுக்கான 5 அம்ச கோரிக்கைகளாவன,

* அவர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்த அதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்க கைத்தொழில் அதிகார சபை மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும்.

* தற்போதுள்ள சூழ்நிலையில் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள். 

* அவர்களுக்கான மூலப்பொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன் அதனை மானிய அடிப்படையில் வழங்க அரசு முன்வரவேண்டும்.

* நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்பத்திகளை மேற்கொள்வதற்கான பயிற்சிநெறிகளை வழங்குவதுடன் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தரமான மற்றும் நவீனத்துவம் மிக்க உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் உபகரணங்களை வழங்குதல்.

* கொரோணா தொற்றினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை ஐனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுனர், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மற்றும் பொறுப்புவாய்ந்த திணைக்களங்கள் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.