மோட்டார் சைக்கிள்களை கண்காணித்தால் விபத்து குறையும்-அஜித் ரோஹண

download 4 1
download 4 1

மோட்டார் சைக்கிள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்மைய , இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 4511 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்க்குள்ளாகி ஏற்படும் இழப்புக்களை தவிர்ப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையானது இன்றைய தினம் வரை இடம்பெறவுள்ளது.

அதற்கமைய இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 4511 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் இருந்ததாக 650 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பேணாமை தொடர்பில் 1021 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 10 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 5 பாதசாரதிகளும் , மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர், முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தற்போது மோட்டார் சைக்கிள்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் , மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களை சிரமத்துக்குள்ளாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் கிடையாது.

விபத்துகளினால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காவல்துறையினரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.