துணிச்சலோடும் தூரநோக்கோடும் செயற்பட்டவர் இராயப்பு யோசப்-ஸ்ரீகாந்தா

download 7 1
download 7 1

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மிகவும்
நெருக்கடி நிறைந்த காலக்கட்டத்தில் தனது ஆத்மீகப் பயணத்தின் நன்கறியப்பட்ட
குறிக்கோளுடன் தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் இணைத்தபடி துணிச்சலோடும்
தூரநோக்கோடும் செயற்பட்ட உன்னத மனிதராக உயர்ந்து நின்றவர் மறைந்த
இராயப்பு ஜோசப் ஆண்டகை என சட்டத்தரணியும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஊடக அறிக்கையில்…

அந்த மா மனிதருக்கு தலை சாய்த்து அஞ்சலி செலுத்த நாம் அனைவரும் கடமை கொண்டுள்ளோம். அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தர் ஓர் வரலாற்றுத் தேவையாக முன்னெழுந்து நிமிர்ந்து நின்றதைப் போலவே இலங்கைத் தமிழ்த் தேசத்தில் இன்னொரு விதத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம் அமைத்திருந்ததை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

தமிழ் இனத்தின் அரசியல் ஒற்றுமையை பலவீனப்படுத்திட பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கும் மத பேதம் என்பது நிரந்தரமாக துடைத்தெறியப்படுவதை சாதிப்பதும் தோல்விகளைக் கண்ட கடந்த காலத்தின் தொடர் விளைவுகளாக காட்சி தரும் சராசரி
அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் பரந்ததும் – பலமானதுமான ஓர் தேசிய விடுதலை இயக்கத்தை ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் தொலை நோக்குடன் கட்டி எழுப்பி ஒளிமயமானதோர் எதிர்காலத்தை எம் சந்ததிகளுக்கு உறுதிப்படுத்திட ஒற்றுமையாக செயற்படுவதுமே பிரிந்து சென்றுவிட்ட ஆண்டகைக்கு எமது தேசம் செலுத்த வேண்டிய உரியதோர் அஞ்சலியாகும்.