வடமாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா!

image 4
image 4

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் ஆசிரியரும் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 15 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

மேலும் ஒருவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றுபவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.