மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் அஞ்சலி செலுத்தினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தொடர்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. உரையாற்றினார்.
இதன்போது, ஆயரின் இறுதிக் கிரியை நேற்று மாலை நடைபெறவுள்ளது எனக் குறிப்பிட்ட சார்ள்ஸ் எம்.பி., ஆயருக்கு தமிழ் மக்கள் சார்பாக தனது அஞ்சலியையும், வணக்கத்தையும் கூறிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களை முன்நின்று தகர்த்து, மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சாட்சியாக உலக நாடுகளில் தன்னைப் பதிவு செய்தவர் என்றும், அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் சார்ள்ஸ் எம்.பி. மேலும் கூறினார்