திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் மதுபான கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

WhatsApp Image 2021 04 06 at 21.41.51
WhatsApp Image 2021 04 06 at 21.41.51

அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் பிரதேசத்திற்கு மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபான கடத்தலில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (06) தம்பிலுவில் பிரதான வீதியில் வைத்து கைது செய்ததுடன் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் 75 போத்தல் மதுபானங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி சமந்த தலைமையிலான வீதிபோக்குவரத்து பிரிவு மற்றும் காவல்துறையினர் இணைந்து தம்பிலுவில் பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரு வியாபாரிகள் கால்போத்தல் கொண்ட 75 போத்தல் மதுபானங்களை உரப்பை ஒன்றில் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு சென்ற போது இவர்களை காவல்துறையினர் தடுத்திநிறுத்தினர் இதன்போது மோட்டார்சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் ஒருவரை கைது செய்ததுடன் மதுபானங்களையும் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.