சீனாவின் தனிநாடாக மாறும் கொழும்புத் துறைமுக நகரம்! – விஜயதாஸ

vijayathasa
vijayathasa


கொழும்புத் துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசு முயற்சிக்கின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஸ தெரிவித்தார்.

விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை தந்திரமான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சீனாவின் அதிகாரத்தின் கீழ் அதனைக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது என்று கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கையின் கடல் பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ள 1100 ஏக்கர் கொண்ட துறைமுக நகர நிலப்பரப்பு சீனாவின் அதிகாரத்தின் கீழ் போய்விடும் என்பதுடன், அந்த விடயத்தில் இலங்கை நாடாளுமன்றத்தாலும் தலையிட முடியாது போகும் என்று விஜயதாஸ ராஜபக்‌ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

1933 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மொன்டிநீக்ரோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று தனிநாடொன்றுக்கான அனைத்து அம்சங்களும் குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தில் இருக்கின்றன. இதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சனத்தொகை, நிரப்பரப்பு என்பன கொழும்புத் துறைமுக நகரத்தில் இருக்கும். அத்துடன் தனியான நிர்வாகப் பிரிவும் இருக்கும். இதன்மூலம் தனியான நாட்டை ஒத்ததாகவே அந்த நகரம் அமையும்.

இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் அந்த நகரம் இருக்கும்போது, அங்கு ஏதேனும் பொருளைக் கொள்வனவு செய்து வெளியேறும்போது அதற்கான வரியைச் செலுத்த வேண்டி ஏற்படலாம்.

இவ்வாறான சட்டமூலத்தை இரகசியமான முறையில் தயாரித்துள்ள அரசு, தமிழ் – சிங்களப் புத்தாண்டு விடுமுறை நெருங்கிய வேளை அதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம் – என்றார்