மருதானையில் கொடூரமாக தாக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி!

1618489558 7614010 hirunews
1618489558 7614010 hirunews

மருதானை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இரும்புக் கம்பி மற்றும் வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருதானை மொஹிதீன் பள்ளிவாசல் வீதியில் கடந்த 10 ஆம் திகதி குறித்த முச்சக்கரவண்டி பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதியுள்ளது. பின்னர் மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் மேற்படி முச்சக்கரவண்டி பள்ளிவாசல் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் வாள்களுடன் அவ்விடத்துக்குவந்த குழுவொன்று அச்சாரதியை சரமாரியாக தாக்கும் காட்சி அருகிலுள்ள சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் சாரதியை மட்டுமல்லாது முச்சக்கரவண்டியையும் தாக்கி சேதப்படுத்தி அதனை புரட்டிப்போடும் காட்சியையும் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் வேளையில் முச்சக்கரவண்டி சாரதி ஓடி உயிர்த்தப்ப முயலுவதையும் சிசிரீவி காட்சிகள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.

பலத்த காயமடைந்த 22 வயதான முச்சக்கரவண்டி சாரதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, சிசிரீவி காட்சிகளைக் கொண்டு சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.