யாழில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

6565
6565

இரண்டம்ச கோரிக்கையை முன் வைத்து , சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அன்னைபூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ,பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் போது மாணவர்கள் அன்னைபூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூபி , மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பை சேர்ந்த அன்னைபூபதி 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்தார். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராவர்.

இந்திய அமைதிப்படைக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கால பகுதியில் , போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , புலிகளுடன் பேச்சு நடாத்தி தீர்வு காணவேண்டும் என இரண்டம்ச கோரிக்கையை முன் வைத்து 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரது போராட்டத்தை முடக்க இந்திய இராணுவம் பல வழிகளில் முயற்சித்தது. உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் , அன்னை பூபதியின் பிள்ளைகள் என சிலரை கைது செய்தனர். ஆனாலும் அவர் போராட்டத்தை கைவிடாது உறுதியாக முன்னெடுத்தார்.

அவரது கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர் நீத்தார்.