யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என்பவற்றில் 396 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 17 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். யாழ்ப்பாண சிறைச்சாலையில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கைதடியைச் சேர்ந்தவர்.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.