கைதாகிறார் விக்னேஸ்வரன்?

இலங்கையின் ஆதிக்குடிகள் சைவத் தமிழர்களே என்று குறிப்பிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு சிங்களத் தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

“இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சொல்வது தவறு. கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரு புத்த மதகுருவால் பாலியில் எழுதப்பட்ட புனைகதைகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு வரலாறு குறித்த தவறான புரிதல் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள வரலாற்றாசிரியர்களும் மற்றவர்களும், குறிப்பாக பௌத்த மதகுருமார்கள், வரலாறாக ஏராளமான பொய்களை அமைத்துள்ளனர். இந்த நாடு தங்களுடையது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தவறானது. இந்த நாட்டின் அசல் மக்கள் சைவ தமிழர்கள். ”

என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஆங்கிலக் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்திருந்தார்.

இக்கூற்றுத் தொடர்பாக விசனமடைந்த சிங்களத் தேசிய அமைப்பு க.வி.விக்னேஸ்வரனைக் கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடுகள் செய்துள்ளது.

தேசிய நல்லிணக்கதிற்கும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் செயற்படும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு தாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் சிங்கள தேசிய அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.