வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு சுகாதார கட்டுப்பாட்டுடன் இடம்பெறும் எனவும் வெளிமாவட்டத்தவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாயத்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கூட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சிவகணேசன் மற்றும் தொற்று நோயியல் தடுப்புவைத்திய அதிகாரி வி.விஜிதரன், படை அதிகாரிகள்,காவல்துறை பொறுப்பதிகாரிகள்,முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம்,மற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர்,பொது சுகாதார பரிசோதகர்கள்,மருத்துவர்கள்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆலய பொங்கல் நிகழ்வு நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்விற்கான முன் ஆயத்த நிழக்வுக்கான முன் நிகழ்வுகள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலத்தில் நடைபெறவுள்ளது இதன் படி வைகாசி மாதம் 10 ஆம் திகதி பாக்குத்தெண்டல் நிகழ்வும் 17 ஆம் திகதி முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலுயத்தில் இருந்து சிலாவத்தை தீர்த்தக்கரையில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி வரை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சி பூசைகள் இடம்பெற்று 24 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்நிகழ்வு நடைபெறவுள்ளது குறித்த பொங்கல் விழாவினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆலய பொங்கல் விழாவிற்கு ஒரு மாத காலப்பகுதியிருப்பதனால் அத்தியாவசிய முடிவுகள் எட்டப்பட்டதுடன் மேலும் இரு வாரங்களினுள் அடுத்த கலந்துரையாடலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது பொது சுகாதார நடைமுறைகளுடன் நடாத்தவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் காவடி எடுத்தல் முதலான நேர்த்திக் கடன்கள் தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது.
அடியவர்கள் ஆலய வழிபாட்டிற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து ஊடகங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் வற்றாப்பணை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக தலைவர் மு.குகதாசன்,முள்ளியளை காட்டுவிநாயாகர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.