மன்னாரில் 2578 ஏக்கர் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை

DSC04374
DSC04374

மன்னார் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (27) காலை 10.30 மணிக்கு மன்னார் உயிலங்குளம் விவசாய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேசச் செயலாளர்கள்,நீர்பாசன திணைக்களம்,விவசாய திணைக்களம்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இலங்கையிலே மன்னார் மாவட்டத்தில் சிறு போக பயிர்ச் செய்கை புலவுகளின் கீழ் செய்யும் நடைமுறை காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இம்முறையும் நெற்பயிர்ச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற யோசனைகள் குறித்த கூட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய 11 ஆம் , 12 ஆம், 13 ஆம் கட்டை பிரதான வாய்க்கால்கள்,அடைக்கல மோட்டை பிரதான வாய்க்கால்,சின்ன உடைப்பு பிரதான வாய்க்கால்,பெரிய உடைப்பு பிரதான வாய்க்கால் என்பவற்றின் ஊடாக 2578 ஏக்கரில் இம் முறை நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக குருவில் வான் வாய்க்கால் ஊடாக 400 ஏக்கர் மேட்டு நில பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டள்ளது.