கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் விஷேட கூட்டம்!

02 6
02 6

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களில் ஐந்து பேர் அதி தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

வேகமாக பரவிவரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரிகளுக்கிடையிலான விஷேட கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது அதில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக், வாழைச்சேனை காவல்துறையினர், பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் றியாஸ், பிரதேச பள்ளிவாயல்கயின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை பொது மக்களுக்கு அறிவிப்பது என பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வாழைச்சேனை காவல்துறையினர் இணைந்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

தேவையற்ற விதத்தில் பொருள் கொள்வனவிற்காக கடை தெருக்களுக்கு செல்வதை தவிர்த்தல்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் உரிய முறைப்படி முகக்கவசம் அணிந்து கொண்டு செல்லல்.

அடிக்கடி முறையாக 30 செக்கன்கள் கைகளை கழுவிக் கொள்ளுதல் அல்லது தொற்றுநீக்கி பாவித்தல்.

புனித நோன்பு பெருநாள் வருவதனால் பொருட்களுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை முற்றாகத் தவிர்த்தல்.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நுகர்வோரை உரிய கொரோனா பாதுகாப்புடன் உள்ளெடுத்து தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

பள்ளிவாயல்களில் கொரோனாவழி முறைகளைப் பேணி 25 பேர்கள் மாத்திரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் வேண்டும்.

பெண்கள் வணக்க வழிபாடுகளுக்கு பள்ளிவாயில்களுக்கு வருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் தங்கள் வணக்க வழிபாடுகளை வீட்டிலிருந்து செய்து கொள்ளுங்கள்.

சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜும்ஆ தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப், தௌபா போன்ற அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக இடைநிறுத்தல்.

பள்ளிவாயல் வளாகத்தில் அல்லது தனியார் இடங்களில் நோன்பு கஞ்சியை விநியோகிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

31.05.2021 வரை சகல தனியார் வகுப்புகள் மதரசாக்கள் மற்றும் பிரத்தியோக வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

சகல பொது நிகழ்வுகள், இப்தார் நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகளை மீறுவோருக்கு எதிராக கொரோனா சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம் என்று அவ் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.