கொரோனாப் பெருந்தொற்று: அதிதீவிர சிகிச்சைக்காக 3 கட்டில்களே வடக்கில்!

np map2 1
np map2 1

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அதி தீவிர சிகிச்சைப் பிரிவு காணப்படுகின்றது எனவும், அதில் 3 கட்டில்கள் மாத்திரமே உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனும் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. தெற்கிலுள்ள வைத்தியசாலைகளின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டில்கள் ஏறத்தாழ நிரம்பிய நிலைமையே காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் கொரோனாத் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், கொரோனா நோயாளிகளுக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மாத்திரமே உள்ளது. அந்த வைத்தியசாலையிலும் 3 கட்டில்கள் மாத்திரம் உள்ளன. தற்போது ஒரு நோயாளி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, ஒக்சிசன் சிலிண்டருக்கு யாழ்ப்பாணத்திலோ வடக்கு மாகாணத்திலோ தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.