உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறதா – காவிந்த ஜயவர்தன

kavinda
kavinda

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களை இலங்கையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையை உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு கொவிட் காப்புறுதியும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டி ஏற்படும். எனினும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது சில சந்தர்ப்பங்களில் முடிவுகள் தவறானவையாக வரக்கூடும்.

இவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டால் இலங்கையிலுள்ள வைத்தியர்களும் தாதிகளுமே சிகிச்சையளிக்க வேண்டியேற்படும்.

அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் ஹோட்டல்களிலுள்ள இலங்கை பிரஜைகளே அவர்களுக்கான சேவையை வழங்குவர். இவர்கள் மூலம் இந்தியாவில் தற்போது பரவும் வைரஸ் இலங்கையிலும் பரவ ஆரம்பத்தில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் போதுமானளவு தீவிர சிகிச்சை பிரிவுகள் இல்லை. தற்போதுள்ளவற்றிலும் 90 வீதமானவற்றில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போன்று தேவையானளவு செயற்கை சுவாச கருவிகளும் இல்லை. இந்தியாவில் திரவ ஒட்சிசன் தயாரிக்கப்பட்ட போதிலும் , அதனை பறிமாற்றுவதற்கான சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கையிலும் இதுபோன்றதொரு நிலைமை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.