கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை

maithri1 1
maithri1 1

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. கொவிட் வைரஸ் சமூக பரவலை தடுக்க பொது மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறை குறித்து நாடாளுமன்ற சுகாதார குழுவிற்கு நான்கு முறை முன்வைத்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டன.

பூகோள வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த விஞ்ஞான ரீதியிலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே தீர்மானம் எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புத்தாண்டிற்கு பிறகு கொவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலடைந்துள்ளது. கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதால் பி. சி. ஆர் பரிசோதனைகள் குறைக்கப்பட்டதுடன், கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைத்தும் அலட்சியப்படுத்தப்பட்டன. சுகாதார பாதுகாப்பை முறையாக பின்பற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் தளர்த்தியது.

பொது மக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பேண வேண்டும் என தற்போது குறிப்பிடுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொவிட்-19 வைரஸ் சமூக பரவலடைந்து விட்டது. புத்தாண்டு காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சும் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது.

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதை முற்றிலும் தடுத்தல், பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுதல், உள்ளிட்ட விடயங்களில் சிறந்த சுகாதார பாதுகாப்பு கொள்கைகளை பின்பற்றும் திட்டத்தை நாடாளுமன்ற சுகாதார குழுவிற்கு நான்கு முறை சமர்ப்பித்தேன். அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அத்தீர்மானங்கள் செயற்படுத்த்தப்படவில்லை.

கொவிட்-19 வைரஸ் விவகாரத்தில் சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட்-19 வைரஸ் தாக்கம் சமூக பரவலடையவில்லை என்று ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுக் கொண்டு முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலிருந்தார். புத்தாண்டு காலத்திலும் சுகாதார அமைச்சு பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்டுள்ள பி117 என்ற வைரஸே தற்போது நாட்டில் இனங்காணப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.