வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா!

COVID 19 870 489
COVID 19 870 489

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். மற்றொருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மானிப்பாயில் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நிதி நிறுவன ஊழியர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டி சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.