வவுனியா – தாலிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருடன் சம்பவ இடத்திற்கு சென்ற இருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்படுத்தினர்.
இதையடுத்து அச்சந்தேகநபர்கள் இருவரையும் 10நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தாலிக்குளம் 8ஆம் ஒழுங்கையிலுள்ள 15 வயது சிறுமி ஒருவர் வழமையாக தனது உறவினரின் வீடு ஒன்றிற்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
சம்பவ தினத்தன்று 10ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சிறுமியை அப்பகுதியிலுள்ள இளைஞன், அருகிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச்சம்பவத்தினுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான 26 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைஎடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.