மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மட்டக்களப்பு, சித்தாண்டி, சந்தனமடுப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக மண் அகழ்வினை மேற்கொண்டு வருவதால் பாதைகள் சேதமடைவதுடன், மழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் வருவதுடன், பெரும்பாலான விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் பிரதேச செயலகத்தின் உத்தரவினையும் மீறி மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவஜீவரஞ்சினி முகுந்தன், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஆகியோர் விஜயம் செய்து சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தனர்.