முடக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக 5000 ரூபா உலருணவு பொதிகள் வழங்க நடவடிக்கை -அரச அதிபர்

DSC03141
DSC03141

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய நிலையில் 373 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியான நிலையில் இன்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் காணப்படுகின்றனர் இதனைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன்  நேரடித் தொடர்புகளை பேணிய 633 குடும்பங்களைச் சேர்ந்த 2447 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் என முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் குறிப்பிட்டார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொரோனா நிலவரம் மற்றும் புயலின் தாக்கம் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குரிய முதல்கட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம் இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றிருக்கின்றது அதாவது குறிப்பாக  மாவட்டத்தில் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 11 கிராம அலுவலர்  பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதல் கட்டமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று இருக்கின்றது மிக விரைவில் அவர்களுக்கான பொருட்களை அவர்களுடைய வீடுகளுக்கு பிரதேச செயலகத்தின்  ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்

அதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட நிறுவனங்கள் நிவாரணங்களை  மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் ஊடாக  வழங்குகின்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம் சில இடங்களில் எங்களுக்கு தெரியாமல்  பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்களுக்கு தெரியாமல் சிலர்  நேரடியாக மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்கி வருகின்றார்கள் இது உண்மையிலேயே நிறுத்தப்பட வேண்டும் ஏனெனில் நாங்கள் ஒரு வழியின் ஊடாக செல்கின்ற போது அதனுடைய இரட்டிப்பு தன்மையை குறைத்து கொள்ள முடியும் எனவே இதனால் மக்களிடையே சில போட்டிகளும் ஏற்பட்டு தனிமைப்படுத்தி இருக்கின்ற பகுதிகளில் உள்ள மக்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை மறந்து நிவாரணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக மக்கள் ஒன்று கூடும்  தன்மை காணப்படுகிறது  இது தொடர்பில் எங்களுக்கு  முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்று இருக்கின்றது எனவே அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி தன்னார்வ தொண்டு அமைப்புகளாக இருந்தாலும் சரி நீங்கள் நிவாரணங்களை வழங்குவதாக இருந்தால் அல்லது அதற்குரிய விருப்பம் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு  தெரியப்படுத்தி ஒரு ஒழுங்கு முறையின் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறு மக்களை குழப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்

மேலும் அண்மையில் ஏற்பட்ட இந்த புயலினால் எமது பிரதேசத்திலே பலத்த காற்று வீசிய நிலையில் பல  பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது அதன் அடிப்படையில் சில தற்காலிக வீடுகளும் சில நிரந்தர வீடுகளுமாக 18 வீடுகள் பகுதி சேதம் அடைந்து இருக்கின்றன அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக அதனுடைய அறிக்கைகள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது அதற்கான அனுமதி கிடைத்ததும் அவர்களுக்கான நட்ட ஈடுகள் வழங்குவதற்கும் நேரடியாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்து அந்த மதிப்பீட்டின்படி அவர்களுக்கான நட்டஈட்டை  வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்  என்றார்