சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றலில் யாழில் கிராம மக்கள் பின்னடிப்பு!

20210530 101814
20210530 101814

யாழ். குடாநாட்டில் நேற்று ஆரம்பமான கொரோனாத் தடுப்பூசித் திட்டத்தில் கிராம மக்கள் போதிய ஆர்வம் காட்டாத நிலையில் 52 வீதமானோரே சீனாவின் ‘சினோபார்ம்’ மருந்து ஏற்றியுள்ளனர்.

குடாநாட்டில் இருந்து 61 கிராம சேவகர் பிரிவுகள் தடுப்பூசி ஏற்றலுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக நேற்று வேலணை பிரதேச செயலாளர் பிரிவில்  ஜே/ 27 கிராமத்தில் 126 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 65 பேர் மட்டுமே தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். இதேபோன்று நல்லூரில் ஜே/ 93  கிராமத்தில் 645 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 389 பேரும், ஜே/94  கிராமத்தில் 125 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 54 பேருமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதேபோன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில்  ஜே/249 கிராமத்தில் 161 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 96 பேரே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/259  கிராமத்தில் 681 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 230 பேர் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில்  ஜே/363 கிராமத்தில் 600 பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் அங்கும் குறைந்தளவிலானோரே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.  

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில்  ஜே/ 157  கிராமத்தில் 1008  பேருக்கு அனுமதிக்கப்பட்டபோதும் 198 பேர் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

காரைநகரில் 500 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 538 பேருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ். குடாநாடு  முழுவதும் நேற்று 5 ஆயிரத்து 711 பேருக்குத் தடுப்பூசி ஏற்ற எதிர்பார்க்கப்பட்டபோதும் 2 ஆயிரத்து 948 பேருக்கு நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டனர்.