வவுனியா நகர்பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படுவதனால் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வவுனியா நகரின் பிரதான வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் காவற்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
நாடெங்கிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர், இரணுவத்தினர் மற்றும் விமானப்படையினரால் பல்வேறு யுக்திகள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியா நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காலை இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து வவுனியா நகரிற்கு செல்லும் நான்கு பிரதான வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வவுனியா ஹொரவப்பொத்தனை வீதி, மன்னார் வீதி, குருமன்காடு, ஏ9 வீதி தாண்டிக்குளம், ஈரட்டை, பூந்தோட்டம் போன்ற பகுதிகளிலே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவற்துறையினரும், விமானப்படையினரும் இணைந்து ரோன் கமராவின் உதவியுடன் மக்களின் நடவடிக்கையினை அவதானித்து நடமாடியவர்களுக்கு எதிராக நடவடிக்ககைகளும் மேற்காெள்ளப்பட்டிருந்ததுடன் இன்றைய தினமும் ரோன் கமரா மூலம் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அவதானிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.